காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்

ராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சியை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பேரூராட்சி 3 வார்டு பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 நாளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், அத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தை , 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலுக்கு முன்பு வரை வாகனங்களில் வாரம் ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது 20 நாட்கள் ஆகியும் கண்டு கொள்ளவில்லை என பெண்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அத்தனூர் செயல் அலுவலர் இடம் அலுவலகத்தில் தொடர்ந்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . மேலும் வெண்ணந்தூர் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் சம்பவ இடத்தில் சமாதான பேச்சுவார்த்தை பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story