பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர்கள் கைது 

பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர்கள் கைது 
செயின் பறிப்பு வழக்கில் கைதான பெலிக்ஸ் சிஜின், ஜெகதீசன்
இரணியல் அருகே பெண்ணின் செயினை பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் புது விளை பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி ராஜம் (62). இவர் கடந்த 8- ம் தேதி கடைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புது விளை பகுதியில் சென்ற போது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் ராஜத்திடம் தக்கலைக்கு எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டனர். ராஜம் வழி சொல்லிக் கொண்டிருக்கும்போது திடீரென பின்னால் அமர்ந்திருந்த நபர் அவரது கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயினை பறித்தார். திருடனுடன் நடந்த போராட்டத்தில் செயின் அறுந்து ஒரு சிறிய துண்டு ராஜத்தின் கையில் சிக்கியது. மீதி செயினை பறித்துக் கொண்ட மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இது குறித்த ராஜம் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.இதை அடுத்து கீழமூலச்சல் ஜான் ரோஸ் மகன் ஜெகதீசன் (34), பிலாங் காலை ஹரிதாஸ் மகன் பெலிக்ஸ் சிஜின் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயினையும் பைக்கையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story