ஐந்து வழக்குகளில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது

ஐந்து வழக்குகளில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது

சவுக்கு சங்கர் கைது

சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

பெண் காவலர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்தனர்.இதேபோல திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அங்கு வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வழக்கிலும் கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் கொடுத்திருந்த புகாரின் பேரில் சென்னை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். இதே போல தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவரும் சென்னை போலீசாரிடம் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் சென்னை போலீசார் கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.இந்த இரு வழக்குகளிலும் கைது செய்ததற்கான உத்தரவினை சென்னை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.இதுவரை ஐந்து வழக்குகளில் யூ டியுபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை ரிமாண்ட் செய்ய சென்னை அழைத்து வராமல் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திலேயே ஆஜர்படுத்தி ரிமாண்ட் பெற்று கொள்ள சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எனவே இந்த இரு வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்திலேயே ரிமாண்ட் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story