நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்வு

ஒரு முட்டை விலை ரூ. 4.30

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

கடந்த 1ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆக இருந்தது. 3ம் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.20 ஆனது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 480, பர்வாலா 386, பெங்களூர் 475, டெல்லி 404, ஹைதராபாத் 410, மும்பை 465, மைசூர் 457, விஜயவாடா 430, ஹொஸ்பேட் 435, கொல்கத்தா 500.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 90 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Tags

Next Story