அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை-நாமக்கல் பா.ஜ.க.வினர் கைது

பா.ஜ.க.வினர் கைது
நாமக்கல்லில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அருகே, இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்புறம், சனாதானத்தை ஒழிப்போம் என்று பேசிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக பேசிய தமிழ்நாடு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக் கோரியும், பா.ஜ.க.வின் ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி,பொதுச்செயலாளர் ரவி, நகரத் தலைவர் சரவணன் ஆகியோர் போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கோட்டை சாலையில இருந்து பேரணியாக வந்த பா.ஜ.க.வினர் இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனாதனத்திற்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபுவை கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை கைது செய்து பஸ்சில் அழைத்துச் சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ச.ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் நாமக்கல் டி.எஸ்.பி தனராஜ், நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூர்ணிமா ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
