நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள்

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள் 

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. சங்க தலைவராக அருள் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் நகரில், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 53 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. மேலும், பெட்ரோல், டீசல், பங்க், ஆட்டோமொபைல்ஸ், டயர் கடை, ஆயில் கடை போன்ற வணிக நிறுவனங்களும் இந்த சங்கத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன.

அகில இந்திய அளவில் இந்த சங்கம் சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த வாரம் இந்த சங்கத்தின் 2023-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தன.

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், உதவி தலைவர், செயலாளர், இணை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய 5 முக்கிய பதவிகளுக்கும், 50 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 55 பதவிகளுக்கு 111 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தற்போதைய சங்க செயலாளர் அருள் தலைமையில் ஒரு அணியினரும், தற்போதைய உதவி தலைவர் சுப்புரத்தினம் தலைமையில் ஒரு அணியினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் கடந்த ஒரு வாரமாக சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர். மேலும் சமூக வளை தளங்கள் மூலமாகவும் இரு அணியினரும் பல்வேறு வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தனர்.

கடந்த 10 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சங்க வளாகத்தில், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மொத்தமுள்ள தகுதியான 4,445 உறுப்பினர்களில், 3,812 பேர் வாக்களித்தனர். மொத்தம் 85 சதவீதம் வாக்குகள் பதிவானதுஉ

மாலை 5 மணிக்கு மேல், முதலில் சங்கத்தின் முக்கிய நிர்வாக பதவிகளான, 5 பதவிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் சங்க தலைவராக அருணகிரி டிரான்ஸ்போர்ட் அருள் வெற்றி பெற்றார். உதவித் தலைவராக மாதேஸ்வரா டிரான்ஸ்போர்ட் பாலன் வெற்றி பெற்றார், செயலாளராக மயில் ஆனந்த் வெற்றி பெற்றார், பொருளாளராக வெங்கடாஜலபதி டிரான்ஸ்போர்ட் சீரங்கன் வெற்றி பெற்றார். இணை செயலாளராக சந்திரசேகர் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு, தேர்தல் குழு தலைவர் சுந்தரராஜன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அதிர்வேட்டு முழங்க தங்களின் ஆதரவாளர்களுடன் நாமக்கல் நகரில் ஊர்வலமாக வந்தனர்.

Tags

Next Story