பீக் ஹவர் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

பீக் ஹவர் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்  ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

பீக் ஹவர் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், மின்சார கட்டண உயர்வினால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கட்டண உயர்வை தாங்கிக் கொண்டாலும், பீக் ஹவர் கட்டணத்தையும், நிலை கட்டணத்தையும் தாங்க முடியாத சூழல் உள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஜவுளித்துறை போன்ற பல உற்பத்தி துறை நிறுவனங்களை பீக் ஹவர் நேரங்களில் நிறுத்தி வைக்க முடியாது. அதேபோல எந்த தொழிலும் சிறப்பாக இல்லாத சூழ்நிலையில் உற்பத்தி குறைப்பை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல தொழில் நிறுவனங்கள் மாதத்தில் பாதி வேலை நாட்கள் கூட இயங்குவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.

இந்த சூழலில் தொழில் நிறுவனங்கள் இயங்கினாலும் இயங்கா விட்டாலும், மாதந்தோறும் செலுத்த வேண்டிய மின்வாரிய நிலைக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். பல நிறுவனங்கள் நிலைக் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தால் கடன் வாங்கியோ அல்லது நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை விற்றோ செலுத்துகிறார்கள். மொத்தத்தில் தொழில் நிறுவனங்கள் மிகவும் நலிவடைந்து வருகின்றன.

இந்த நிலையில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தான் அதிகமான வேலை வாய்ப்புகளை கொடுக்கிறார்கள். அதனால் வேலை இழப்புகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் ஒன்று இரண்டு ஆண்டுகளில், தமிழ் நாட்டில் பல நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இந்த எதார்த்த நிலைகளைக் கருத்தில் கொண்டு பீக் ஹவர் கட்டணம் என்ற கட்டண முறையை உடனடியாக கைவிட வேண்டும்.

5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலை கட்டணத்தை உடனடியாக பழைய முறைக்கு மாற்ற வேண்டும். சமூக சமநிலை வேண்டி பல்வேறு பிரிவுகளுக்கு இலவசம் மின்சாரமும், சலுகை விலை மின்சாரமும் கொடுப்பது அரசின் கடமை. இந்த செலவுகளாலும் மற்றும் மின்சார வாரியத்தின் செயல் திறன் குறைவாலும் ஏற்படுகின்ற நஷ்டத்தை ஏற்கனவே சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற தொழில் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க நினைக்கின்ற அரசின் அனுகுமுறை மிகவும் தவறானது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பீக் ஹவர் மற்றும் நிலை கட்டண உயர்னால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து தொழில் நிறுவனங்களை அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story