உயர்நீதிமன்றத்திற்கு வர இயலாது: ராமதாஸ்

Ramadoss and Anbumani
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி நாளை கூட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டி உள்ளதால், இருவரையும் தன்னுடைய அறைக்கு நேரில் வர கூற முடியுமா ? என இரு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, மாலை 5:30 மணிக்கு தன் அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் யாருக்கும் அனுமதியில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வர முடியாத சூழல் உள்ளதாக அவர் தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் கடிதம் ஒன்றை அவர் தரப்பு வழக்கறிஞர் கொடுத்துள்ளார். அதேநேரம் அன்புமணி வருவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
