ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடா? ஆதாரத்தை வெளியிடுங்க: நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ₹15,000 கோடி முதலீடு செய்ததாகத் திமுக அரசு அறிவித்த வேளையில், "அது புதிய முதலீடல்ல" என்று நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளித்தது பத்திரிகைச் செய்திகளில் வந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகதியில் தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்கள் "அது உண்மையான முதலீடு" என்று விளக்கமளித்தார். ஆனால், அதற்கு எந்த ஆதாரத்தையும் பொது வெளியில் தரவில்லை. முதலீடு எதுவுமில்லை என்று மறுப்பு தெரிவித்த நிறுவனமும், மாற்று அறிவிக்கை ஏதும் வெளியிடவில்லை! எதற்கு இந்தக் குழப்பம்? ஒருவேளை NDA ஆளும் ஆந்திரா மாநிலத்தில் கூகுள் நிறுவனம் ரூ.1.3 லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதை அறிந்ததும், திமுக அரசின் குறைபாடுகளை மூடி மறைத்து திசைதிருப்ப முழுமையடையாத அல்லது போலியான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? இல்லை, பழைய முதலீடு தூசித்தட்டப்பட்டு புதியது போல பாவனை செய்யப்பட்டதா? எது உண்மை? முதன்முதலில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் என்னும் அடிப்படையில் கேட்கிறேன். தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அல்லது, புதிய முதலீடு எனத் திமுக கூறி வருவதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை அறிவிக்கை ஒன்றினை வெளியிடச் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
