சொன்னீங்களே...செஞ்சீங்களா..? திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? நயினார் நாகேந்திரன்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பொருட்கள் பூங்கா, கொடைக்கானலில் மண்டலத் தோட்டக்கலை ஆய்வு மையம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை, பழனி மற்றும் கொடைக்கானல் இடையே கேபிள் கார் வசதி ஆகியவை அமைத்துத் தரப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே? உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலையும் அதுசார்ந்த திண்டுக்கல் மாவட்டத்தையும் கைகழுவி விட்டுவிட்டு, உலக நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதில் என்ன பயன்? உள்நாட்டில் உள்ள வியாபாரத் தளங்களை மேம்படுத்துவதை விட்டுவிட்டு வெளிநாட்டு முதலீடுகளை நம்பி என்ன பயன்? மக்களை ஏமாற்றி மக்கள் வரிப்பணத்தை இப்படி சுரண்டுவதற்குப் பெயர் தான் நாடு போற்றும் நல்லாட்சியா? ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகளில் பாதியையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா உங்களுக்கு? தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பொய்களைப் பேசி ஊரை ஏமாற்றி, தமிழக மக்களுக்கு இப்படி நம்பிக்கைத் துரோகம் இழைப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடல் அரசா முதல்-அமைச்சரே? இவ்வாறு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
