உதயநிதி ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் பேட்டி

உதயநிதி ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் பேட்டி
X
உதயநிதி ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் பியூஸ் கோயல். பின்னர் அவர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி விருந்து அளித்துக் கெளரவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற காலை உணவு விருந்தில் பியூஷ் கோயல் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமி தனது நீண்டகால நண்பர் என்று குறிப்பிட்ட அவர், இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தின் நலனுக்காக தற்போதைய திமுக அரசு எதையும் செய்யவில்லை. இது ஊழல் நிறைந்த ஆட்சி. திமுக ஆட்சியில் இளைஞர்களும், பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் ஆதரவைத திமுக இழந்து விட்டது. சனாதனத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்து, உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தலில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்தி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். அது தமிழகத்திற்கு சிறந்த எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் என்றார் அவர். தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை. உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார். உதயநிதி பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர் என்று அவர் கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது , தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும். தமிழக அரசு எல்லா துறைகளிலும் தோல்வி கண்டுவிட்டது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது என்று கூறினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.

Next Story