"ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்”.. திமுகவுக்கு நெருக்கடி தரும் கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள், அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் பேசி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, "ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது. இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட்களும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனால் அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை எதிா்பாா்ப்பதாக காங்கிரஸூம் கூறுகிறது.
எங்களைப் பொறுத்தவரை திமுக எங்களுக்கு சிறந்த தோழமைக் கட்சி. நாங்கள் அவர்களிடம் பேரம் பேசத் தேவையில்லை. சிறந்த ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதற்காக எங்கள் கட்சி கீழேபோக வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. நண்பர்களாக இருக்கிறவர்களில் ஒருவர் நல்ல சட்டை போட்டுள்ளார். அதேபோல, எனக்கும் ஒரு சட்டை கொடு என்று கேட்பது தவறு இல்லை. அதற்காக அவர் போட்டிருக்கிற சட்டையைப் பறிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும், எங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்பதில் தவறில்லை. அதற்காக இந்த கூட்டணியை விட்டு நாங்கள் போய்விடுவோம் என்கிற மாயையை உருவாக்குகின்றனா். திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்.
அதிமுகவை பொறுத்தவரை விளிம்பு நிலைக்குச் சென்றுவிட்டது. தமிழகத்தின் உரிமையைப் பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்கிறார். அந்த கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களைப் போன்ற தெளிவு இல்லை. கருத்து உடன்பாடு கூட அவர்களிடம் இல்லை." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கேஎஸ் அழகிரி, "சென்சார் மட்டும் தரவில்லை என்றால் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதித்தால், அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அழகிரி, திமுக கூட்டணியில் இருந்துகொண்டு கூறிய இந்தக் கருத்து அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் நடித்துள்ள'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தணிக்கைச் சான்றிதழ் இதுவரை வழங்கப்படாதது படக்குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதல்நாள் காட்சி முன்பதிவு தொடங்காததும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவில், பட வெளியீடு தாமதமாகும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Faceboo
