மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சர் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல: ஓ.பன்னீர்செல்வம்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சர் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல: ஓ.பன்னீர்செல்வம்
X

O.Panneerselvam

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் வரை மும்மொழி கொள்கையை எதிர்ப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கடைபிடித்தார்கள். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம். எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story