பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து: உதயநிதி ஸ்டாலின்

udhayanithi stalin
சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திராவிடவியல் அமர்வில் திராவிட இயக்கம் குறித்த கருத்தரங்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற சிறப்புரையாற்ற உள்ளார். மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால், அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்க்க மோடி அரசு முயற்சி செய்கிறது. கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்க பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சி நடக்கிறது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை இந்தியா கூட்டணி உயர்த்தி பிடித்து வருகிறது. அரசியல் சட்டத்தின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தி.மு.க. சட்டத்துறை மாநாட்டின் கருத்தரங்கு, கலந்துரையாடல் நடக்கிறது என்று அவர் பேசினார்.