என் சாதனையை கோலி முறியடித்ததில் மகிழ்ச்சி: சச்சின்

மும்பை வான்கடே மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்து அசத்தியது இந்திய அணி.
அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களைக் குவித்தார். இது அவரின் 50-வது சதமாகும். இதுவரை சச்சினின் 49 சதமே கிரிக்கெட் வரலாற்றில் தனிநபரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இன்று கோலி அச்சாதனையை முறியடித்து சச்சின் டெண்டுல்கருக்கு இந்த சதத்தை சமர்ப்பணம் செய்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தன் எக்ஸ் தளத்தில் சச்சின் டெண்டுல்கர், “ இந்திய டிரஸ்ஸிங் அறையில் உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கிண்டல் செய்தார்கள்.
அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள்.
அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது.
அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் நடந்திருக்கிறது” என தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
