திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோயில் 

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களிலும், விழாக்காலங்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். கோவில் அன்னதானக்கூடத்திலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று உணவு சாப்பிட்டனர். பெரும்பாலான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

Tags

Next Story