காஞ்சி கோவில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுது

காஞ்சி கோவில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுது

மஞ்சபை இயந்திரம் பழுது

காஞ்சி கோவில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுதானதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தமிழக அரசின், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கடந்த ஆண்டு மே மாதம் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் நாணயம் அல்லது 10 ரூபாய் நோட்டு செலுத்தினால், மஞ்சப்பை வழங்கி வந்தது. இந்நிலையில், மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.

பழுதடைந்த இயந்திரத்தை அப்புறப்படுத்தாமல் உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மஞ்சப்பை பெறுவதற்காக இயந்திரத்தில், 10 ரூபாய் செலுத்துகின்றனர். மஞ்சப்பை வராததால் பணத்தை இழந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, மஞ்சப்பை வழங்கும் தானிய இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது: கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தெரியாததால், அடிக்கடி இயந்திரம் பழுதடைந்து விடுகிறது.

எங்களிடம் மஞ்சப்பை கொடுத்தால், விற்பனை செய்ய தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடப்பட உள்ளது. தற்போது, பழுதடைந்த நிலையில் உள்ள தானியங்கி இயந்திரம் பழுது நீக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story