ஓம் முருகா முழக்கத்துடன் திருச்செந்துாரில் மாசி திருவிழா துவக்கம்

ஓம் முருகா முழக்கத்துடன் திருச்செந்துாரில் மாசி திருவிழா துவக்கம்

கொடியேற்றம் 

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா, மாசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

இந்நிலையில், நடப்பாண்டிற்கான மாசித் திருவிழா இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, சார்பு நீதிபதி வஷித்குமார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.

7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. இணை ஆணையருக்காக காத்திருந்த கொடியேற்றம்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில் அதிகாலை 4:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சிக்கான பூர்வாங்க பூஜைகள் ஹரிஸ் சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் துவங்கியது.

அதிகாலை 4:40 மணிக்கு கொடியேற்றத்திற்க்கான பூஜைகள் முடிந்தன. பின்னர் இணை ஆணையர் வருகைக்காக கொடியேற்றும் நிகழ்ச்சி காத்திருந்தன. அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயகுமார் ஆவேசமடைந்து கொடியை ஏற்றுகிறீர்களா நாங்கள் ஏற்றவா கேட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் இணை ஆணையர் கார்த்திக் வந்ததும் சரியாக 4:52 மணிக்கு பக்தி கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

Tags

Next Story