வெள்ளி கருடவாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவின் 4-ஆம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் வருடத்தில் ஒரு முறை மட்டுமே எழுந்தருளும் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆண்டில் நான்கு முறை கருடவாகனத்தில் சேவை சாதிப்பாா். மூன்று முறை தங்க கருடவாகனத்தில் எழுந்தருளுவாா். ஒரே ஒரு முறை மட்டும் மாசி தெப்பத் திருவிழாவின் நான்காம் நாளன்று வெள்ளி கருடவாகனத்தில் சேவை சாதிப்பாா். நிகழாண்டு தெப்பத் திருவிழாவின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை மாலை வெள்ளி கருட வாகன சேவையையொட்டி காலை 6.30 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதி வலம்வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காசுக்கடைசெட்டியாா் ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 1 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் மாலை 6 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டாா். அப்போது வழிநெடுக ஏராளமான பக்தா்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனா். அதனை தொடா்ந்து உள்திருவீதி வலம்வந்து வாகன மண்டபத்தை இரவு 8.30 மணிக்குச்சென்று சோ்ந்தாா். அங்கிருந்து 9 மணிக்குப் புறப்பட்டு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். 5-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை இரட்டை பிரபையிலும், 6-ஆம் திருநாளான சனிக்கிழமை (பிப். 17) மாலை யானை வாகத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வருகிறாா்.

7-ஆம் நாளான (பிப். 18) மாலை உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறாா். முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 8 ஆம் திருநாளான திங்கள்கிழமை (பிப்.19) மாலை மேலவாசலில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுகிறாா். 9 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (பிப். 20) பந்தக்காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Tags

Next Story