நோய்களை தீர்க்கும் பஞ்சவர்ணேஸ்வரர்

நோய்களை தீர்க்கும் பஞ்சவர்ணேஸ்வரர்

பஞ்சவர்ணேஸ்வரர் 

அனைத்து விதமான நோய்களும் முக்கியமாக தோல் நோய், இதய நோய்களை தீர்க்கும் பரிகார தலமாக பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது.

திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில். வனம் சூழ்ந்த திருத்தலங்களை ஆரண்யம் என்றும், காட்டுத் தலங்கள் என்றும் சிறப்பிப்பார்கள். சென்னை- திருவள்ளூரைச் சுற்றி ஐந்து காட்டுத் தலங்கள் உண்டு. திருவாலங்காடு (ஆலங்காடு), திருப்பாசூர் (மூங்கில் காடு), திருவெண்பாக்கம் எனப்படும் பூண்டி (இலந்தைக்காடு), திருவிற்கோலம் (தர்ப்பைக்காடு), ஈக்காடு (ஈச்சங்காடு) ஆகிய ஐந்தையும் பஞ்சாரண்ய தலங்கள் எனப் போற்றுவர். இவற்றுள் ஈக்காடு தலம் தவிர, மற்றவை தேவாரப் பாடல் பெற்றவை.

ஒருவேளை, இந்தத் தலத்துக்கும் பதிகம் பாடப் பெற்று, அது கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும், பாடல் பெற்ற தலங்களுக்கு இணையான புராணச் சிறப்புடன் திகழ்கிறது ஈக்காடு. இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர் என்பது திருப்பெயர். . குபேரன் கையில் இருந்த அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் கீழே சிந்தி விட, அந்த இடத்திலிருந்து அமிர்தம் நனைந்த சிவலிங்கம் ஒன்று சுயம்புவாய் வெளிப் பட்டது. அதனை குபேரன் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் வணங்கி வழிபட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இறைவன், அமிர்த தாரைகள் வழியும் தன்மையோடு இத்தலத்தில் எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்

. பதினெண்சித்தர்களில் ஒருவரான போகர், இந்த லிங்கத்துக்கு நவபாஷாண கலவை சேர்த்திருப்பதாகவும், இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்த திரவியங்களை அருந்த, தீராத பிணியும் தீரும் என்றும் நம்பிக்கை உண்டு. கருவறையில கிழக்கு நோக்கி விசேஷ திருக்கோலம் காட்டுகிறார் ஸ்ரீபஞ்ச வர்ணேஸ்வரர். இரண்டு ஆமை ஓடுகளைப் பொருத்தியது போன்று வித்தியாசமாய்த் தோற்றம் காட்டும் ஸ்வாமியின் லிங்கத் திருமேனியில், மேலிருந்து கீழாக கறுப்பும் வெள்ளையுமாகக் கோடுகள் தெரிகின்றன. இரண்டு யானைத் தந்தங்களைப் பிடிப்புக்கு நிறுத்தி, மூலிகைப் பொருட்களால் நிலைநிறுத்தியது போல் தோன்றுகிறது.

சாம்பல், மஞ்சள், வெண்மை, கறுப்பு, சந்தனம் என ஐந்து நிறங்களில் இந்த லிங்கம் வண்ணம் மாறுவதாகத் தெரிகிறது. கருவறை மூலவரின் மீது செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகப் பொருட்களை உட் கொள்பவர்களுக்கு சகலவிதமான உடல் உபாதைகளும் நீங்குவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தோல் சம்பந்தமான வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகப் பிரசாதத்தை உட் கொள்வதாலும், இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகத் திருநீற்றை உடலில் பூசிக் கொள்வதாலும் அப்பிணி நீங்கி நலம் பெறுகிறார்கள் என்பது அனுபவக் கூற்று.

அழகுத் தோற்றத்தில் இக்கோயில் அம்பாள் திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். வழிபடும் பக்தர்களின் எம பயத்தைப் போக்கும் வரப்ரசாதியாக அம்பாள் விளங்குகிறாள். கோயிலின் வடக்குப் பகுதியில் காசி விச்வநாதர் லிங்க வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு கற்பூர தீபாராதனை செய்யும் பொழுது லிங்கத்தில் ஜோதி தெரி கிறது. சாவா, மூவா தன்மையுடன் கூடிய இந்த புதுமையும் அதிசயமு மான அமிர்த லிங்கத்தை வணங்கினால் தொழில் தடை, வியாபாரத் தடை, கிரகங்களால் உண்டாகக் கூடிய தடைகள் யாவும் நீங்கும் என பிரார்த்தித்துப் பயன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

இக்கோயில் அர்த்தமண்டபத் தூண்களை ஒரு கலைக்களஞ்சியம் என்று கூறலாம். அவற்றில் அமைந் துள்ள காஞ்சி ஏகாம்பரேச்வரர், காளஹஸ்தி திருக்காளத்தீச்வரர், நாகலாபுரம் அடுத்த ராமகிரீஸ்வரர் (ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை வாலில் கட்டி இழுக்கும் காட்சி), பைரவர் திருச்சிலைகள் என எழிலுற வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டு, அவரது திருமேனி தீண்டிய பிரசாதங்களை உட்கொள்ள, இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களும் குணமாகிறது அமைவிடம்: ரெட்ஹில்ஸ் - திருவள்ளூர் சாலையில் ஈக்காடு பழைய தபால் நிலையப் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ளது கோயில். திருவள்ளூர் தேரடியிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் 3 கி.மீ. பேருந்து வசதி உண்டு.

Tags

Next Story