செம்மண், கருங்கல் கடத்திய 2பேர் கைது : 2 லாரிகள் பறிமுதல்

செம்மண், கருங்கல் கடத்திய 2பேர் கைது : 2 லாரிகள் பறிமுதல்
பைல் படம்


தட்டப்பாறை அருகே சட்டவிரோதமாக செம்மண் மற்றும் கருங்கல்லை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று (08.06.2024) தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டப்பாறை வடக்கு சிலுக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தூத்துக்குடி மறவன்மடம் ராமநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிமுத்து (36) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக எவ்வித அனுமதியுமின்றி செம்மண் திருடி சென்றதும் தெரியவந்தது.

இதேபோன்று மேற்படி வருவாய் துறையினர் நேற்று தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலதட்டப்பாறை பேருரணி ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், தெற்கு சிலுக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் நடராஜ பெருமாள் (43) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி லாரியில் எவ்வித அனுமதியுமின்றி கருங்கல்லை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து மேற்படி வருவாய் கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமரேசன் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளில் மாரிமுத்து மற்றும் நடராஜ பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூபாய் 7,000/- மதிப்புள்ள 3 யூனிட் செம்மண் மற்றும் ரூபாய் 4,500 மதிப்புள்ள 2 யூனிட் கருங்கல், மணல் மற்றும் கல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story