அதிமுக பொதுகூட்டத்தில் 23 தீர்மானங்கள்.. 14 தீர்மானத்தில் திமுக அரசுக்கு கண்டனம்..!

அதிமுக பொதுகூட்டத்தில் 23 தீர்மானங்கள்.. 14 தீர்மானத்தில் திமுக அரசுக்கு கண்டனம்..!

அதிமுக பொதுகூட்டம் 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்பு நடைபெறும் முதல் கூட்டமாகும். மேலும் பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடந்த முதல் பொதுக்குழு கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 14 தீர்மானங்கள் திமுக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள் :

  1. அதிமுக-வை வழிநடத்தி வரும் பொதுசெயலாளர் எடப்பாடி மு. பழனிசாமிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
  2. மதுரையில் நடத்திய `கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
  3. ‘மிக்ஜாம்’ புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும்; காலத்தே மீட்புப் பணிகளை மேற்கொள்ளாமலும், எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம்; பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  4. i) தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பச் செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ii) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  5. கச்சத் தீவை மீட்பதற்கு வலியுறுத்தல் மற்றும் இலங்கை கடல் கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  6. மாநில உரிமைகள் பறிபோனதற்கு தி.மு.க-வே முழுமுதற் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மக்களின் கவனத்தை திசை திருப்பவும்; பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றவும் இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  7. சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  8. 'கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்’ என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாரக மந்திரம்; ஊழல் ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  9. சிறுபான்மையின மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கவும்; 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும், திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
  10. ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
  11. ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
  12. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  13. நெசவுத் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  14. பட்டியலின மக்களுடைய நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறிக்கும் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  15. தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் வகையில், கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவசர நிலையில் பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  16. i) தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. ii) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.
  17. சமூக நீதிக்கு எதிரான திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  18. காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் திமுக-வின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  19. நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்; ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே `நீட் தேர்வு’ ரத்துதான் என்று மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளித்த திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  20. புரட்சித் தலைவி அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியது; சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தில் இருந்து ஆவின் பால் விலை வரை உயர்த்தி, மக்களை வஞ்சித்து வரும் சர்வாதிகார திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  21. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும்; புதிய அணை கட்டப்போவதாக நெருக்கடி கொடுக்கும் திமுக-வின் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருக்கும் கேரள அரசின் செயலை கண்டிக்காமலும்; இருந்து வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  22. ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தப்பட்டது.
  23. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என உறுதி மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story