இளம்பெண்ணிடம் ஆசை காட்டி ரூ.27 லட்சம் மோசடி, இணையதள மோசடி கும்பல் கைவரிசை

இளம்பெண்ணிடம் ஆசை காட்டி ரூ.27 லட்சம் மோசடி, இணையதள மோசடி கும்பல் கைவரிசை

இணையதள மோசடி 

தஞ்சாவூரில், பெண் ஒருவரிடம், ஆன்லைன் வேலை மூலம், அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, 27 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்மநபரை இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர், மருத்துவக் கல்லுாரி சாலையை சேர்ந்தவர் 36 வயது பெண். இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்தப் பெண் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த, அக்.10 ஆம் தேதி, 'வாட்ஸ்அப்' மெசேஜ் ஒன்று வந்தது. அதில் ஆன்லைன் வாயிலாக, வீட்டிலிருந்தபடியே பகுதி நேரமாக வேலை செய்தால், தினமும் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் பெண் மெசேஜில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் பேசிய மர்ம நபர், சில நிறுவனத்தின் புகைப்படங்களையும் அனுப்பி, அதற்கு மதிப்பீடு செய்து கொடுத்தால், குறிப்பிட்ட தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அந்த பெண்ணும் அவர்கள் கொடுத்த டாஸ்க்கை முடித்துள்ளார். சில நாட்கள் கழித்து பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், அந்த பெண்ணிடம் இன்னும் சில 'டாஸ்க்' செய்தால் அதிக லாபம் பெற முடியும். அதற்கு முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் தனது தம்பி வீடு கட்டுவதற்காக லோன் மூலம் வாங்கி வைத்திருந்த 27 லட்சம் ரூபாயை கேட்டுப் பெற்று பல தவணைகளாக ஆன்லைன் வாயிலாக, அந்த மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பின், அந்த மர்ம நபரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். ஆய்வாளர் செந்தில்குமார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைனில் வேலைவாய்ப்பு என கூறி மோசடிகள் அதிகளவில் நடக்கிறது. இதனால் இளைஞர்கள், பெண்கள் யாரும் ஏமாற வேண்டாம் என இணையதளக் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story