தமிழக அரசின் திட்டங்களால் 4.81 கோடி பேர் பயன் - டி.ஆர். பாலு

தமிழக அரசின் திட்டங்களால் 4.81 கோடி பேர் பயன் - டி.ஆர். பாலு
திமுக பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு.
ஜாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாகக் கூறியது நியாயமா? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு தெரிவித்தார்.

தஞ்சாவூர் திலகர் திடலில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்கிற நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு பேசியது: கடந்த 2019 ஆம்ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அப்பலவீனத்தைப் பயன்படுத்தி பாஜக வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றது. அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது.

இதிலிருந்து எத்தனை பேர் விலகிச் சென்றாலும், இந்தியா கூட்டணியிடம்தான் வாக்கு வங்கி உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காலம் வந்துவிட்டது என 2011 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நரேந்திர மோடி கூறினார். அச்சட்டத்தைத் தயார்படுத்த அரசு வழக்குரைஞரின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்புச் சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் 2013 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அடுத்து குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைக் கொண்டு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், மோடி பிரதமராகி 10 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், 3 கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டுக்கு மெட்ரோ இரண்டாவது திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, வெள்ளச்சேதத்துக்கு இழப்பீடு கொடுக்க மறுப்பு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது. வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே, குறுக்கே பேசினார்.

அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் எனக் கூறினேன். ஜாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாகக் கூறியது நியாயமா? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதத்துக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகியுள்ளது என்பதைச் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அவ்வளவும் பெரிய முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை செய்துள்ளது. திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, நான் முதன் திட்டம், காலை உணவுத் திட்டம், நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதல்வர் உருவாக்கியுள்ளார். எனவே, நமது முதல்வரை மக்கள் நம்பிக்கை, உறுதி, விருப்பம், வெற்றி, எதிர்காலம் எனக் கருத வேண்டும் என்றார் டி.ஆர்.பாலு. இக்கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், மேயர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story