காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 70 வது கலந்துரையாடல்

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 70 வது கலந்துரையாடல்
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 70 வது கலந்துரையாடல் நடைபெற்றது
விருதுநகரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 70 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூர் மாணவர்களுடன் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் பயிலும் 170 க்கும் மேற்பட்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் நடைபெற்ற சிறப்பு “Coffee With Collector” என்ற 70-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாக கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்களுடன் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, மக்களவைத் தேர்தல் 2024 எதிர் வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் பயிலும் 170 க்கும் மேற்பட்ட முதல்முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று 70-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளிப்படையான, நியாயமான முறையில் பொதுமக்களுடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தெரிவுமுறைக்கு பெயர்தான் தேர்தல். இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள், இந்திய தேர்தலின் வரலாறு குறித்தும், தேர்தலில் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், ஜனநாயக கடமையை எல்லோரும் ஆற்ற வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.

அதனை தடுப்பதற்கான பல்வேறு கண்காணிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் உடைய மிக முக்கியமான வாய்ப்பு நமக்கு வாக்குரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கு உரிமையை நிறைவேற்ற வேண்டும்.

நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான். இளம் தலைமுறை வாக்காளர்கள் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் பற்றிய வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க செய்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்கள் தேர்தல், வாக்களிப்பதன் அவசியம், மின்னணு வாக்குபதிவு இயந்திரம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் இந்த தேர்தலில் தவறாமல் எங்கள் வாக்கினை பதிவு செய்வதோடு, வாக்களிப்பதன் அவசியத்தை பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எடுத்துக்கூறுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Tags

Next Story