ஜல்லிக்கட்டு காளையை குளிப்பாட்டச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி

ஜல்லிக்கட்டு காளையை குளிப்பாட்டச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி
இளைஞர் பலி
தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளையை குளத்தில் குளிப்பாட்டும் போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மோத்திரப்பச்சாவடி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் முகேஷ் கண்ணா (27). கோரிக்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் அஜித் (25). இவர்கள் இருவரும் கடந்த 13-ஆம் தேதி ஜல்லிக்கட்டு காளையை குளிப்பாட்டுவதற்காக கோரிக்குளம் பகுதியில் உள்ள ஒரு குளத்துக்கு சென்றனர். குளத்துக்குள் இறங்கி ஜல்லிக்கட்டு காளையை முகேஷ் கண்ணா குளிப்பாட்டி கொண்டு இருந்தார்.

அப்போது குளத்தின் பள்ளம் இருப்பது தெரியாமல் அப்பகுதியில் முகேஷ் கண்ணா சிக்கி தவித்தார். இதைப் பார்த்த அஜித் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களிடம் தகவல் கூறினார். உடனே அருகிலிருந்த பொதுமக்கள் வந்து குளத்தில் குதித்து முகேஷ் கண்ணாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

உடன் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகேஷ் கண்ணா வியாழக்கிழமை இறந்தார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story