திருவண்ணாமலையில் அன்னாபிஷேகம் - பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

திருவண்ணாமலையில் அன்னாபிஷேகம் - பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

அண்ணாமலையார் 

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று பிற்பகல் அன்னாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக பக்தர்களால் போற்றப்படுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வார விடுமுறை நாட்களிலும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஐப்பசி மாத பெளர்ணமி இன்று சனிக்கிழமை அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்றும் நாளையும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்கள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று போக்குவரத்து கழகம் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக அறிவித்துள்ளது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, ஆத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூர் மற்றும் ஓசூர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையம், சென்னை, ஓசூர், பெங்களூர், கோவை, திருப்பூர், சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும். திருவண்ணாமலைக்கு பெங்களூரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இவ்வாறான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது என சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த நேரத்தில் நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு வரும் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் மாலை 6 மணி வரைக்கும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடைபெற்ற பின்னர் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலைக்கு வரும் 28, 29ம் தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வண்டி எண்: 06127, வேலுார் கண்டோன்மென்ட்டில் இருந்து வரும் 28 ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு 29ம் தேதி அதிகாலை 12.05க்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து வண்டி எண் 06128 சிறப்பு ரயில் வரும் 29ம் தேதி அதிகாலை 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 5.35க்கு வேலுார் கண்டோன்மென்ட் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .

Tags

Next Story