இந்தியா கூட்டணியில் குழப்பம் உருவாக்க பாஜக சதி - மாணிக்கம் தாகூர்

இந்தியா கூட்டணியில் குழப்பம் உருவாக்க பாஜக சதி - மாணிக்கம் தாகூர்
நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி

விருதுநகரில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்கள், ராகுல் காந்திக்கு சம்பந்தமில்லாத சொத்துக்கள். மோடி அரசால் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் மீது நடத்தி வருகின்ற தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாக தான் இதை பார்க்கிறோம். மேலும் இது மாதிரி தொடர் நடவடிக்கை எடுத்து வருவதன் விளைவாக மக்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவிலும் மோடி அரசுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்.

சினிமா தியேட்டரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறும் பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. பேருந்துகளை அடித்து நொறுக்குவது மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்று அங்கு தான் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் உள்ளது என குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவின் எல்.முருகன் மத்திய இணை அமைச்சருக்கான பொறுப்போடு பேச வேண்டும் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி காங்கிரஸ் கட்சியை பொருத்த மட்டில் இந்தியா கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் எனவும் அதற்காக என்னென்ன விட்டுக் கொடுக்க வேண்டுமோ அனைத்தையும் விட்டுக் கொடுத்து ஒரு வெற்றிகரமான கூட்டணி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சி முழு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவதற்காக பாஜகவால் திட்டமிட்ட சதி நடக்கிறது.. அதனுடைய ஒரு பகுதியாகத்தான் இப்படி பட்ட எண்ணிக்கைகளை பார்க்கிறேன் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வர் இருக்க வேண்டும் என்ற விவகாரத்தில் அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசி இருப்பதை வரவேற்கிறேன் என்றார். மேலும் எதிர்க்கட்சி முதல்வரை ஆளும் கட்சி முதல்வர் பாராட்டி பேசும் கலாச்சாரம் என்பது தமிழகத்திற்கு வரவேற்கப்பட வேண்டிய கலாச்சாரம் என்றார்.

தமிழகத்திற்கு தொழிலும் அவசியம் விவசாயமும் அவசியம் என்றார். உண்மையாக விவசாயம் நடைபெறும் இடங்களை கையகப்படுத்தும் போது அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் தொழில் நடப்பதற்காக விவசாயத்தை அழிப்பதோ அல்லது தொழில் நடக்காமல் இருப்பதற்காக விவசாயம் என்ற பேரில் அரசியல் செய்வதையோ ஏற்றுக்கொள்ளவில்லை. என்றார்.

Tags

Next Story