அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்

அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்

கூர்நோக்கு இல்லம்


தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தப்பியோடிய சிறுவனைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களை அடைப்பதற்கான அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது.

இந்த இல்லத்தில் இரு சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை காலைக்கடன்கள் மேற்கொள்வதற்காக இருவரும் கழிப்பறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்டவரும், வல்லம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவருமான 17 வயது சிறுவன் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். இது குறித்து இல்ல அலுவலர்கள் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் காவல் துறையினர் அச்சிறுவனைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story