நோய்கள் குறித்து அறிவிக்க வற்புறுத்த முடியாது- உயர் நீதிமன்றம்

வேட்பாளர் உடல்நிலை குறித்த பரிசோதனை சான்றிதழ் சேர்க்க வேண்டும் என்றால் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எஸ்.வி.சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். உடல் நிலை குறித்த பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால், அவற்றை கேட்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் விளக்கம் அளித்தார். தான் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன் வாதம் செய்தார். வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வேட்புமனுவுடன் வேட்பாளரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்துவதற்கு சட்டத்திருத்தம் தான் கொண்டு வர வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Tags

Next Story