டெலிவரி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய மையம்

டெலிவரி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய மையம்
X

டெலிவரி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய மையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு, பொருட்கள் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள், சிறப்பு மையம் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,

தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டத்தை இயற்றியது. அதன்படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்பட 18 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.

18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மேற்படி நலவாரியங்களில் தங்களை உறுப்பினர்களாக https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற பின்னர் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்ணாடி, வீட்டுவசதி திட்டம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி கோரி பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதியுதவித் தொகை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் சுதந்திர தின உரையின் போது, இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் அவர்களுக்கென தனியாக நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டது. இதில் தொழிலாளர்களின் பதிவை துரிதப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 14.06.24 வரை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இணையம் சார்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தல் ஆன்லைன் மூலம் பொருட்கள் மற்றும் துரித உணவுகள் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, பிறந்த தேதிக்கான ஆவணம் (பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், மின்னணு ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம்), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0461-2341110 என்ற எண்ணை தொட்ரபு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story