சித்தேரி தண்ணீர் வெளியேற்றம் அடைப்பு

அரியலூர் சித்தேரி தண்ணீர் வெளியேற்றம் அடைப்பை அடைத்து உடனடியாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர். பாராட்டு குவிந்து வருகிறது.
அரியலூர் ஏப்.29- அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த சித்தேரியில் தற்பொழுது வெயில் காலத்தில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் ஏரிக்கரையின் ஒரு ஓரத்தில், சமூக விரோதிகள் சிலர் ஏரிக்கரையை உடைத்துள்ளனர். இதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இது தொடர்ந்தால் ஏரியில் உள்ள அனைத்து நீரும் வெளியேற்றப்பட்டு, சித்தேரி நீரின்றி வறண்டு போய்விடும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வல்களில் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஏரியிலிருந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்துவதோடு, ஏரிக்கரையை உடைத்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரியலூர் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து செய்தி வெளியானதும், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு, உடனடியாக சித்தேரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்தி, வெட்டப்பட்ட கரையை அடைத்து, ஏரியை பலப்படுத்த உத்தரவிட்டார். அரியலூர் துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்று, கரையின் உடைப்பை அடைத்துவிட்டார். இதனால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உடனடி செயல், அரியலூர் நகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story