விருதுநகர் மினி பஸ் விபத்து; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!!

விருதுநகர் மினி பஸ் விபத்து; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!!

ஸ்டாலின் 

விருதுநகர் மினி பஸ் விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 நபர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மம்சாபுரம் கிராமத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற மினி பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரழிந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், தெய்வேந்திரி கிராமம், மம்சாபுரம் முதன்மைச் சாலையில், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று (27.9.2024) காலை 8.00 மணியளவில் சிற்றுந்து ஒன்று எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், திருவில்லிப்புத்தூர் காந்திநகரைச் சேர்ந்த திரு.மாடசாமி (வயது 29) த/பெ. குருசாமி: செல்வன்.வாசுராஜ் (வயது-16) த/பெ.செல்வராஜ்: செல்வன் நிதிஷ்குமார் (வயது 17); ஆகிய இரண்டு மாணவர்கள் மற்றும் செல்வன்.சதிஸ்குமார் (வயது 20) த/பெ.கோவிந்தன் என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story