தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து துவக்கம்

தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே போக்குவரத்து துவக்கம்

பஸ்கள் இயக்கம் 

தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே 5 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. திருச்செந்தூரில் இருந்து மாற்று வழியில் நெல்லைக்கு வாகனங்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிந்தன. சில குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளின் குறுக்கே பாய்ந்து ஓடியது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. கடம்பாகுளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளநீர் மறுகால் ஓடை வழியாக பாய்ந்து ஓடியது. இந்த தண்ணீர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் வரண்டியவேல் விலக்கில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அந்த பகுதியில் கடந்த 17-ந் தேதி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பாய்ந்து ஓடியது. இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் வெள்ளநீர் வடிந்தது. அதேநேரத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஏற்பட்ட சேதங்களும் சீரமைக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே 5 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை பஸ்கள் போக்குவரத்து தொடங்கியது. திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, மதுரை வழித்தடங்களில் 7 பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாற்று வழியில் நெல்லை-திருச்செந்தூர் இடையே நேற்று 6-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேசமயம் நேற்று காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே நாலுமாவடி, நாசரேத் வழியாக ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், வி.எம்.சத்திரம் வழியாக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story