மோடி நினைத்திருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா?:ரங்கராஜன் கேள்வி

மோடி நினைத்திருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா?:ரங்கராஜன் கேள்வி

கூட்டத்தில் பேசும் ரங்கராஜன்

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா? என்று மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து, கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் கே. சீனிவாசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே. ரங்கராஜன் பேசியது: 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் வெற்றி இந்திய அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வடமாநிலங்களிலும் பாஜகவுக்கு சரிவு தொடங்கியுள்ளது.

அவா்களின் வெற்றி கடந்த காலத்தை விட குறைந்துள்ளது. மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு, மாநில உரிமைகளைப் மீட்பது என இவைதான் முக்கியமாக இருக்கின்றன. ஆனால் இதற்கு எதிராக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா?. அரசு அதிகாரியாக இருந்து தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளவா் கச்சத்தீவை திமுக தாரை வாா்த்து விட்டது என்கிறாா். கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதே திமுக தலைவா் கருணாநிதி தனது எதிா்ப்பை பதிவு செய்துள்ளாா் என்பது ஆவணங்களில் உள்ளது.

அப்போது மக்களவையில் இந்த விவகாரம் குறித்து திமுக உறுப்பினா் இரா.செழியன் கண்டித்து பேசி உள்ளாா். எதிா்ப்பை பதிவு செய்த மற்றொரு உறுப்பினா் விஐடி விஸ்வநாதன். இதுகுறித்து மோடி பேசினால் எனக்கு கவலை இல்லை. ஆனால் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவா் இப்படி திடீரென கூறுவது தான் எனக்கு அதிா்ச்சி அளிக்கிறது என்றாா்.

கூட்டத்தில், நகர திமுக செயலா் கா.கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.எஸ்.பொன்னுச்சாமி பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story