தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., பி.டி.ஒவுக்கு மிரட்டல் - கூடுதல் ஆட்சியரிடம் அளித்த மனுவால் பரபரப்பு

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தன்னை பணி செய்ய விடாமல் மிரட்டுவதாக, வட்டார வளர்ச்சி அலுவலர், கூடுதல் ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியனில், வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவானந்தம். இவர் தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்திடம், திருவோணம் தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மகேஷ் கிருஷ்ணசாமி தன்னை பணி செய்ய விடாமலும், தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்க வேண்டும் என மிரட்டுவதாக மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், சிவவிடுதி ஊராட்சியில் 2022 – 23ம் ஆண்டு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட, அனுமதி வழங்கப்பட்டு ஊராட்சி செயலாளருக்கு வேலை உத்தரவை வழங்கினேன். இப்பணியை சிவவிடுதி பஞ்சாயத்து தலைவர் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்ய முயன்ற போது, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., ஒன்றியக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி என்பவர், திருவோணம் முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, தனக்கு இந்த வேலையை செய்ய ஒப்படைத்ததாகவும், பணியினை நான்தான் செய்வேன் என கூறி தடுத்துள்ளார். இதற்கு சிவவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலரான என்னிடம் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி, முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் வேலையை கலியமூர்த்தி என்பவர் தான் செய்வார், என்னை கேட்காமல் நீ எந்த வேலை உத்தரவும் யாருக்கும் வழங்கக் கூடாது என மிரட்டினார். மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனுமதிக்கப்படும் எந்த வேலையையும், எந்த பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவிக்கக் கூடாது. தன்னிடம் தான் தெரிவிக்க வேண்டும். அதற்கு இஷ்டம் இருந்தால் தான் வேலை பார்க்க முடியும். இல்லையேல் திருவோணம் வட்டாரத்தை விட்டு ஓடிவிடுடா,. என்றும், ஆட்டுக்கொட்டகை, மாட்டுக்கொட்டகை அமைக்கும் பயனாளிகள் பட்டியல் நான் தான் தருவேன். அதை மட்டும் தான் நீ கூடுதல் ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒப்பந்த வேலைகளை நான் சொல்லும் நபருக்கு தான் கொடுக்க வேண்டும் எனக் கூறி, என்னைப் பற்றி உனக்கு தெரியுமா, உன்னை கட்டி வைத்து உதைத்து விரட்டி விடுவேன் என தாறுமாறான, தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார். தொடர்ந்து திருவோணம் யூனியன் பகுதியில், வளர்ச்சி பணிகள் காலதாமதமாக நடப்பதற்கு முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி தான் காரணம். இவர் தொடர்ந்து மிரட்டல் விடும் நிலையில், திருவோணம் யூனியனில் பணிபுரிய மிகுந்த அச்சமாக உள்ளது. எந்த நேரத்திலும் தமது அடியாட்களை வைத்து என் மீது தாக்குதல் ஏற்படுத்துவார் என்ற நிலையில், பணிபுரிய உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே வேறு யூனியனுக்கு என்னை பணிமாறுதல் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். அறிவானந்தம் அளித்த மனு திருவோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story