போராட்டம் நடத்த விவசாயிகள் தில்லிக்கு பயணம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் தில்லிக்கு நேற்று புறப்பட்டனா்.

விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5,000 வழங்க வேண்டும், காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கா்நாடக அரசு மாதா மாதம் தண்ணீா் திறக்க வேண்டும், மேக்கே தாட்டுவில் அணை கட்டக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, அச்சங்கத்தின் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் 200-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்காக தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு நிஜாமுதின் சம்பா்க்கிராந்தி விரைவுரயில் மூலமாக தில்லி நோக்கி பயணத்தைத் தொடங்கினா்.

Tags

Next Story