செங்கம் அருகே அரசுப் பேருந்து -கார் மோதல் : 8 பேர் உயிரிழப்பு

செங்கம் அருகே அரசுப் பேருந்து -கார் மோதல் : 8 பேர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான கார் 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திங்கள்கிழமை இரவு காரும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 11 பேர் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, பெங்களூரில் இருந்து காரில் புதுச்சேரிக்கு சனிக்கிழமை சென்றனர். புதுச்சேரியில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்கள் விடுமுறையை கழித்த அவர்கள், திங்கள்கிழமை மாலை அங்கிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கருமாங்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கார் சென்ற போது, பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தும் காரும் மோதிக் கொண்டன. இதில், காரில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பீமல்தீர்க்கி (26), நிக்லேஸ் (22), தாலு (26), குஞ்சாராய் (24), கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையைச் சேர்ந்த புனிதகுமார் (25), ஊத்தங்கரை வட்டம், மாராப்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (29), ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த நாராயணன் சேட்தி (35) ஆகிய 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேல்செங்கம் போலீஸார், செங்கம் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்களின் சடலங்களை காரிலிருந்து தீயணைப்புப் படையினர் மீட்டனர். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிகேஸ் முர்மு (29), ஸ்டிபன் ஓரோ (43) சடோன் ஓரங்க் (25), கிஸ்மோத் (32) ஆகிய நான்கு பேர் காரிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், பிகேஸ் முர்மு செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சரக டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொடரும் கோர விபத்துகள்: கடந்த 15ம் தேதி இதே பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

Tags

Next Story