ஒகேனக்கல் : காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு 3,500 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி,கேரட்டி, பிலிகுண்டலு, ஒகேனக்கல் மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து சரிந்தும் சில நேரங்களில் அதிகரித்தும் காணப்பட்டு வரும் சூழலில் நேற்று முன்தினம் 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 3,500 கன அடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழக எல்லை பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீரின் அளவை அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story