`தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் எங்களை விமர்சித்தபோது இனிக்கிறது. நங்கள் பேசினால் வலிக்கிறதா..." - சீமான்

`தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் எங்களை விமர்சித்தபோது இனிக்கிறது. நங்கள் பேசினால் வலிக்கிறதா... - சீமான்

 சீமான்

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார், ``துரைமுருகன் பாடிய பாட்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க இயற்றிய பாடல். அப்போதெல்லாம் எதுவும் கூறாத தி.மு.க இப்போது பேசுகிறது. அவதூறு பேசுவதற்கு தாய் கட்சி தி.மு.க தான். கண்ணியமாக, நாகரீக அரசியல் செய்ய தி.மு.க-வுக்கு தெரியாது.

சண்டாளன் என்ற சமூகம் இருப்பது எங்களுக்கு உண்மையில் தெரியாது. பின்னர்தான் தெரிந்துகொண்டோம். கந்த சஷ்டி கவசம், திரு மந்திரம், கம்ப ராமாயணம் தமிழ் இலக்கியங்களில் சண்டாளன் என்ற வார்த்தை இருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் எங்களை விமர்சித்தபோது இனிக்கிறது. நங்கள் பேசினால் வலிக்கிறதா... இருக்கிற பாடலைதான் பாடினேன். 133 பேர் ஒரே மாதத்தில் கொலை, மீனவர்கள் கைது என தொடர்ந்து இருக்கும் எந்தப் பிரச்னைக்கும் தி.மு.க தீர்வு காணவில்லை.

சவுக்கு சங்கருக்கு லாரி ஏற்றி அச்சுறுத்தல் செய்தது போல, தம்பி துரை முருகனையும் பின்னாலிலிருந்து லாரி இடிக்க வைத்து ஒரே ஃபார்முலாவில் அச்சுறுத்தல். சண்டாளன் என்ற வார்த்தையை நான் பேசியது அந்த சமூக மக்களுக்கு வருத்தமாக இருந்தால், சாணார் சமூகம் நாடார் ஆனது போல, பள்ளர் சமூகம் தேவேந்திரர் ஆனது போல நீங்களும் உங்கள் சமூகப் பெயரை மாற்றிக்கொள்ளுங்களேன். திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். பொதுத் தொகுதியிலிருந்து உங்களால் வெற்றிபெற முடியுமா...

ஒரு பொதுத் தொகுதியை கேட்டுவாங்க முடியாத திருமாவளவன், 16 பொதுத் தொகுதியில் போட்டியிட்ட நான் சாதி பெருமை பேசுவதாக எப்படி கூறமுடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்று தெரிந்துதான் அ.தி.மு.க பின்னடைந்தது. ஆனால், நாங்கள் வளரும் கட்சி அப்படி பின்னடைய முடியாது. எங்கள் கருத்துகளை வைத்துக்கொண்டு, நாம் தமிழர் கட்சி என ஒரு கட்சி இருக்கிறது என மக்களுக்கு கூறிக்கொண்டே இருக்கிறோம். அதுதான் முதன்மையானது. உண்மையில் இது தேர்தல் மாதிரிதான் நடக்கிறதா... இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சாதி, மதம், காசு, மது, சாப்பாடு இப்படிதான் தேர்தல் அரசியல் சுழற்சி இருக்கிறது. கூட்டணி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் கனவை ஏற்று, எங்கள் கொள்கைக்கு உடன்பாடும் கட்சி, கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். என்கவுண்டர் எதற்காக செய்யப்படுவது என்ற கேள்வி இருக்கிறது. கொடூரமாக குற்றவாளிகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். இறந்தவர்கள் எல்லோரையும் புனிதமாக்க முடியாது. அவர்கள் செய்த செயல்கள்தான் அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். இறப்பு மட்டுமே ஒருவரை புனிதராக்காது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags

Next Story