சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மக்கள் நலனுக்காக நவசண்டி யாகம்

உலக நன்மைக்காக சண்டி யாகம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. ஊர் மக்களின் நலனுக்காகவும், நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று நவசண்டி யாகம் தொடங்கியது. நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், சப்தசதி பாரயண ஹோமம், 13 அத்தியாய ஹோமம், சுஹாசினி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
நேற்று முதல்நாள் யாகமானது அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் சார்பில் நடத்தப்பட்டது. இதில் ஜாகீர் அம்மாபாளையம் பகுதி மக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி வரை இந்த சண்டி யாகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
