நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை

கோவை ஆலந்துறையில் உள்ள நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி ரஞ்சித் மற்றும் காளப்பட்டியில் உள்ள முருகன் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை:சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் 2022 ஆம் ஆண்டு காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்திய போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த காரில் இருந்த இரண்டு இளைஞர்கள் கை துப்பாக்கி,துப்பாக்கி தயாரிக்கும் உதிரி பாகங்கள்,கத்தி, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த என்ஐஏ அதிகாரிகள் சென்னை சுகாதாரத் துறையில் பணிபுரியும் கபிலர் என்ற நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ் பொறியியல் பட்டதாரி என்பதும் நவீன் சக்கரவர்த்தி எம்.சி.ஏ பட்டதாரி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் செட்டி சாவடியில் வாடகைக்கு அறை எடுத்து யூடியூபில் பார்த்து , துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. இவர்களுக்கு தேச விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில்இன்று என்ஐஏ இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் வந்த அதிகாரிகள் கோவை ஆலந்துறையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் ரஞ்சித் வீடு மற்றும் காளப்பட்டியில் உள்ள முருகன் என்பவரது வீடுகளில் சோதனை நடதினர்.

ரஞ்சித் யூட்யூபில் ஒரு சேனல் நடத்தி வருகிறார். அதன் மூலமாக பலரிடம் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கும், துப்பாக்கி தயாரித்த பட்டதாரி இளைஞர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சோதனையில் இருவரது வங்கி கணக்குகள் மற்றும் இணையதளங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.மேலும் இருவரின் செல்போனையும் கைப்பற்றி அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இரண்டு நபர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story