ஆன்லைன் ஷாப்பிங்கால் வினை - ஐடி பெண் ஊழியரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்

ஆன்லைன் ஷாப்பிங்கால் வினை - ஐடி பெண் ஊழியரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்

ஐடி பெண் ஊழியரிடம் ஒரு லட்சம் திருட்டு

காட்பாடியில் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் செய்த ஐடி பெண் ஊழியரிடம் ரூ.1 லட்சம் மர்ம நபரால் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி தண்டலம்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் 27 வயது பெண் ஐ.டி. ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைதளம் ஒன்றில் குறைந்த விலைக்கு ரெடிமேட் ஆடை விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை பார்த்து ஆன்லைனில் அதனை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் அவர் ஆர்டர் செய்த ஆடைக்கு பதிலாக வேறொரு ஆடை பார்சலில் வந்தது. அதனால் அந்த உடையை திரும்ப அனுப்புவதற்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த மெயிலில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்மநபர் பணத்தை திரும்ப செலுத்துவதற்காக ஒரு லிங்க் அனுப்பி உள்ளதாகவும், அதில் அந்த ஆடைக்கான பணத்தை திரும்ப அனுப்பி விடுவதாக கூறினார். அதனை நம்பிய அவர் மர்மநபர் கூறியபடி அந்த லிங்கில் சுய விபரங்களை பதிவிட்டார்.

சிறிதுநேரத்தில் இளம்பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.99,999 பணம் எடுக்கப்பட்டது என்று குறுந்தகவல் வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story