முன்னாள் டி ஜி பி ராஜேஷை கைது செய்ய ஒடிசா விரைந்த போலீசார்

முன்னாள் டி ஜி பி ராஜேஷை கைது செய்ய  ஒடிசா விரைந்த போலீசார்

பைல் படம்

பெண் போலீஸ் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய தனிப்படை போலீசார் ஒடிசா விரைந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20,500 ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தண்டனையை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்து கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி விட்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவரது வீடு மற்றும் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் தேடியும் காணவில்லை. ராஜேஷ் தாஸ் அவரது சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு தப்பிச் சென்று இருக்கலாமோ என்ற சந்தேகம் சிபிசிஐடி போலீசாருக்கு எழுந்துள்ளது. அதனால் சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவரை பிடிக்க ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story