ஆயுதபூஜைக்கு தயாராகும் சேலம் பொரி - இரவு பகலாக தயாரிப்பு பணி

ஆயுத பூஜையையொட்டி சேலத்தில் பாரம்பரிய முறைப்படி பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகளில் பொரிக்கு தனி இடம் உண்டு அந்த வகையில் தமிழகத்தில் சேலம் நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பழமையான முறையில் பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இயந்திரங்கள் மற்றும் பழமையான முறையில் கைகளில் பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இயந்திரங்களில் தயாரிக்கப்படும் பொரியை விட அடுப்பு பொரிகளுக்கு மவுசு அதிகம் அதனால் அடுப்புகளில் தயாரிக்கப்படும் பொரிகளுக்கு ஆடர்கள் குவிய தொடங்கியுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் சேலம் செவ்வாப்பேட்டை அம்மாபேட்டை ஓமலூர் ஆகிய இடங்களில் அடுப்புகள் மூலம் பழமையான முறையில் பொரி தயாரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பொறி தயாரிப்பதற்கான நெல் வகைகள் தமிழகத்தில் தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது அதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது ஆயுத பூஜை என்றாலே பொரி என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பொரி இல்லாத பூஜைகள் இல்லை என்ற அளவுக்கு ஆயுதபூஜையின் போது கடவுளுக்கு பொரி, கடலை மற்றும் பழங்கள் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் வருகின்ற 23ஆம் தேதி ஆயுத பூஜை தொடங்க உள்ளது. சேலத்து பொரி சுவை மிக்கது என்பதால், இங்கு தயாரிக்கப்படும் பொரி சேலம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டமான தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஈரோடு, கோவை மற்றும் பெங்களூர் போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் சேலத்தில் ஆங்காங்கே பொரி உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போதைய இயந்திரமாகிவிட்ட காலத்தில் இயந்திரங்களில் பொரி தயாரிப்பதை தவிர்த்து சேலம் உற்பத்தியாளர்கள் பாரம்பரிய முறைப்படி பொரியை தயாரித்து வருவதால் இயற்கையாகவே சேலம் பொரிக்கு சுவை அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மாத கணக்கில் அதற்கான உரிய அரிசியை பதப்படுத்தி, துளையிடப்பட்ட அடுப்பில் நெல் உமிகளை விறகாக கொண்டு சூடேற்றி அந்த சூட்டில் பொரி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் பொறி சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக பொரி உள்ளது.


Tags

Next Story