காவிரி ஆற்றில் நள்ளிரவில் மணல் கடத்தல்

மணல் கடத்திய அப்பா, மகன், பேரன் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆறு உள்ளது . இப்பகுதியில் உள்ள இரு மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி உள்ளது. காவிரி ஆற்றில் எப்பொழுதும் நீர் கரை புரண்டு ஓடும். இதனால் குமாரபாளையம் பகுதியில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது . தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணை வறட்சி காரணமாக, காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மணல் திருட்டு கும்பல், இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் விடிய விடிய, காவிரியில் மணல் திருடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் திருடி வந்த நபர்கள் குறித்து வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பள்ளிபாளையம் சாலை, பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள காவிரி ஆற்றில் மணல் திருடுவது குறித்து தகவல் அறிந்து, வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் காவிரி கரையில் காத்திருந்தனர். நேற்று இரவு 11:30 மணியளவில் காவிரி ஆற்றிலிருந்து இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிவாறு மூன்று நபர்கள் வந்தனர். கையும், களவுமாக பிடிபட்ட அவர்களிடமிருந்து இரண்டு மாட்டு வண்டிகள், மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த சேகர், 31,மாது, 58, மற்றும் கண்ணன், 18 என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் அப்பா, மகன், பேரன் ஆவார்கள். இதனையடுத்து வருவாய்த்துறையினர் இவர்கள் மீது குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்து மணல் திருட்டிற்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததுடன் மூவரையும் போலீசில் ஒப்படைத்தனர்

Tags

Next Story