பாலியல் புகார் : குமரி அரசு ஆயுர்வேத மருத்துவகல்லூரியில் மேலும் ஒருவர் கைது

பாலியல் புகார் : குமரி அரசு ஆயுர்வேத மருத்துவகல்லூரியில் மேலும் ஒருவர் கைது

ஆய்வக உதவியாளர் வைரவன்

இரண்டு நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் பாலியல் புகாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவருக்கு தொல்லை கொடுத்ததாக மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்து வரும் டாக்டர் ஆண்டனி சுரேஷ் (52) என்பவரை கடந்த 22- ம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு மாணவி ஒருவரும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் மனு அனுப்பி இருந்தனர். அந்த புகார் மனுக்களில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக இருக்கும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வைரவன் (35) என்பவர் தங்களுக்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்ததுடன், விரும்பத்தாகாத செயல்கள் செய்து வெறுப்பூட்டும் வகையில் பின் தொடர்ந்து வருவதும் வருவதாக புகார் அளித்தனர். புகாரை உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். இதன்பேரில் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு லேப் டெக்னிஷியன் வைரவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இவர் மீது ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இது போன்ற புகார்கள் வந்ததன் பேரில், சுகாதாரத் துறை மூலம் அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை மெமோ கொடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு 2 நாளில் திருமணம் நடக்க உள்ளது.


Tags

Next Story