நீலகிரியில் கோடை மழை

நீலகிரியில் கோடை மழை

நீலகிரியில் கோடை மழை

நீலகிரியில் வாட்டி வதைத்த வெயில், இன்று பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். இதன்படி தென்மேற்கு பருவமழை 700 மி.மீ., வடகிழக்கு பருவமழை 300 மி. மீ., கோடை மழை 250 மி.மீ., பெய்யும். இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

இந்நிலையில் நீலகிரியில், கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் முறையாக கோடை மழை சில்லென்ற குளிர் காற்றுடன் தொடங்கியது. ஆனால் அதற்குப் பின்னர் மழை பொய்த்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதற்கிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கோடை மழை பெய்ததால் ஊட்டிக்கு உரிய குளிர்கால நிலை வந்தது. இதனால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்டியில் பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 73 சதவீதமாக இருந்தது. வரும் காலங்களில் கோடை மழை அதிகமாக பெய்து நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் இந்த மழை தொடர்ந்தால் நீலகிரியை வாட்டி வதைத்து வரும் காட்டுத்தீ பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story