டிஜிட்டல் பிரச்சாரத்தில் திருமாவளவன்

க்யூ ஆர் கோடு வாயிலாக விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளருமான திருமாவளவனின் டிஜிட்டல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ இதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் வெளியிலும் விசிக அதிகளவு இளைஞர்களை சென்று சேரும் விதமாக QR Code மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.‌ விசிக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் காணப்படும் QR code -யை செல்போனில் பார்க்கும்போது திரையில் திருமாவளவன் தோன்றி, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம், மக்களிடம் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், தனக்கும் தொகுதிக்கான உறவுகள் குறித்து பேசுவார்.

பெரம்பலூரின் வேப்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தொல் திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அங்கு ஒட்டப்பட்டிருந்த QR code -யை தங்களின் செல்போனில் இயக்கி பரிசோதித்தனர். திரையில் திருமாவளவன் தோன்றி பிரச்சாரம் செய்தவுடன் தொண்டர்கள் ஆர்பரித்தனர். தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் தனது செல்போனில் இயக்கி விடியோ பார்த்து மகிழ்ந்தார். மேலும் இப்பிரச்சாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து திருமாவளவனிடம் கேட்டு வியந்தார்.

Tags

Next Story