திருவண்ணாமலை தீப திருவிழா : 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை தீப திருவிழா :  2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆய்வு கூட்டம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திரு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஆணையர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சண்முகசுந்தரம் பேசுகையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு கோட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் 6 ஆயிரத்து 832 நடைகளாக இயக்கப்படுவதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கொண்டு வந்து ஆட்டோக்களை இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோக்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வேகமாக இயக்கினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு ஆட்டோவில் மூன்று நபர்களை மட்டும் தான் ஏற்ற வேண்டும் தெரிவித்தார். மேலும் ஆட்டோக்களுக்கு ஒரு நபர் ஒருவருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், கூடுதலாக கட்டணம் வசூலிப்பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசுகையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப உலாவை காண்பதற்காக கடைசி இரண்டு நாட்கள் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பேருந்துகள் முறையாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தனியார் பேருந்துகள் இலவசமாகவும், மினி பேருந்துகளில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வரை ஒரு நபருக்கு குறைந்தபட்சமாக பத்து ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களையும் இயக்குவதற்கு அனுமதி இல்லை. சரக்குகள் ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது என்றும் அவ்வாறு ஏற்றினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story